Happy new year 2012

காற்றில் வாழும் காற்றே!
மூச்சைத்தின்ன உடல்பையுள் பிடிபட்டாய்
காலம் கடத்தும் காலத்தை வாழ்வென்றாய்
உடல்பையின் வாழ்வு ஓட்டையின் கையில்
ஓட்டைவாழ்வில் மெய்யே பொய்யாக
ஊதிய காற்றே எங்கு செல்வாய்?

காற்றைக் கரியாக்கி
காலத்தைக் காலனுக்கு இரையாக்கும் காதல்
காலக்கடுப்பில்
சுனாமிவரப்பில்
வெள்ளப்பெருக்கில்
கரையுமா? குறையுமா?

காற்றிருந்தால் தான் மனம்
காற்றுப்போனால் அதுபிணம்.
காற்றே காற்றை காற்றாய் வாழவிடு.

சிந்துவின் விந்து தமிழர் என்றிருந்தும்
நிந்தனை செய்ததால் சிந்து சீறினாளோ?
வெள்ளம் வேவு பார்த்தது.
ஈழத்தமிழன் இரத்தத்தில்
சீனச்சுவர் சிவந்து விழுந்தது.

யப்பான் அணுவுலையில் உயிருலை
சுனாமி சுருட்டிப்போனதே ஒரு கலை
மெய்ஞானம் எல்லாம் பொய்ஞானமாகி
விண்ணாணம் பார்த்தது விஞ்ஞானம்.

துனீசியத் தெருவில் தெறித்தது ஒரு தீப்பொறி
போரில் பொரிந்த தலைகளிலும் இழுபறி
பற்றிய தலைகள் எண்ணையில் எரிய
முற்றிய மார்க்கங்கள் மூடிக்கிடக்க
தீக்கள் தின்றது காடல்ல? நாடே
நாடு நாடாத நாடுகள் கூடி
எண்ணையை நாடின.

நாடு நமக்கில்லை -இருந்தும்
எண்ணை அதிலில்லை
நாதியும் எமக்கில்லை
போதிமரத்துப் போதிகளால்
மீதி? மீதியாய் வாழ்வே பாதி

ஆண்டாண்டாய் ஆண்டவன்
நாட்டவரின் உருத்திர தாண்டவத்தில்
2011வரை ஆடினான்
ஆடி ஆடியே ஓய்தான்.

போர் போர் என்று தன்
பொருளாதாரத்தை போட்டுடைத்தான்
போக்கத்த மேற்கத்தையன்
வறுமையில் ஒடியது
வெறுமையில் வாடியது 2011

உபாமா
உசாமாவிளக்கில் எண்ணை தேடி-கடைசியில்
கடலுக்குள் போட்டார் தன் நன்மை நாடி.
எண்ணையில் எரிந்தது 2011
இன்னும் எரியுமா? மனிதமே புரியுமா?

களமாடிய மகிந்தனை
இலங்கையின் கொலைக்களம்
களமாடியது?.. மனமாடியது
தினமாடிய தமிழரின் மனங்களில்
ஐநா பிணமாடியது.

சூரிய திசையில்
சூரியன் அஸ்தமனமற்ற இராச்சியத்தில்
சுட்டதே சூரியன்.
கடைகள் வெடித்துத் தெருவில் விரிய
பாதுகாவலர்களே பயந்து ஓட
பொருள்கள் எல்லாம் இலவசம்
இலண்டன் எங்கும் 2011 பரவசம்.

கிறுக்குப்பிடித்த நள்ளிரவுச் சூனி(ரி)யன்
இஸ்லாத்தைக் குறிவைத்து
பாலகர்க்குப் பொறிவைத்தான்
அமைதிப்புறா உதிரத்துடன் உயர்ந்தபடி
ஊருக்கு உபதேசம் இனி உனக்கில்லையடி

வடகொறிய நாட்டுக்குப் பொறிவைத்தார்
அணுவாயுதத் தந்தை காலனால் பறிபட்டார்
மார்பு தட்டியவர் மாரடைப்பில் போக
கண்ணீரில் பிறக்கிறது புத்தாண்டு
சென்னீரும் வெளிறுமோ இவ்வாண்டு?

பெரியாரணையைப் புரியா மனிதா!
தண்ணீருக்கா தடை?
தண்ணீர் கரையுடைத்தால் கண்ணீர் -நீ
அக்கறைப்படும் உன் தரை
வெள்ளம் வெகுண்டால் எக்கரை?
புத்தாண்டில்
மனிதத்தின் வாயில் போடு சக்கரை.

கருணையற்ற காலம்
பதினொன்றைப் பந்தாட
மனிதவாழ்வு திண்டாட
கண்ணீரில் கரைத்தது காலம்- இனி
பன்னிரண்டு பிறக்குமா புதியகோலம்?

புனிதம் நிறைந்த மனிதம் வளர்க்கும்
கணிதம் கொண்ட காலமே பிறக்க.
மனுநீதி நிறைந்த தனிநீதி மார்க்கம்
பிறக்கும் புத்தாண்டில் பரவிச் சிறக்க.

2012ல் மனிதம் தேடும்
நோர்வே நக்கீரா.

Yakagin Vallkai


யாக்கையின் வாழ்க்கை!!!

பூக்கள் சிரிக்க

பூமகள் சிறப்பாள்

பாக்கள் பிறக்க

பாரே சிறக்கும்.

ஐரோப்பியப் பூக்கள் மலர

மகரந்தம் பறக்கும்

மகிழ்ச்சியை அழிக்கும்.

அழகிய மலர்களின் மகரந்தங்கள்

ஐரோப்பாவில் எமக்கு அலேர்ஜி

ஐரோ மட்டும் என்றும் அலாதி


சொண்டு உண்டு உண்டு என்று

சொண்டு உண்டு

சொண்டிழந்து போனவர்கள்

பொய்வாயை மெய்வாயாக்க

செவ்வாய் செய்கிறார்கள்.

அது செவ்வாயல்ல

செய்வாய்

அழகுறச் செய்வாய்

வாய்களில் மட்டுமா பொய்

வார்த்தைகள்??


கண்கெட்டுப் போனவர்கள்

கண்விட்டுப் போய்விடாது

கண்கீறிப்போகும் காட்சிதான்

அஞ்சனமோ?

கண்களின் வஞ்சகமோ?

கண்கீறிய காயங்கள்

விண்ணேறி வலித்தாலும்

பெண்மனத்தில் இல்லைப் பேதமை

கண்கனத்துக் கொண்டாது

கண்ணீரில் சாதனை

விதியின் கரங்கள்

முகத்தில் எழுதிய

வரைபடம்தானே

வயது

அதன் முதிர்வு.

விதியைக் கூட

சதிசெய்து அழிக்கும்

சாதனைதானே மேக்கப்பு (ஒப்பனை)

பெண்ணே கீப்பப்பூ


ஒப்பனையில்லா ஒப்பனை கூட

வைப்பனையாகும் முகங்களிலே

செப்பனை செய்யா

கற்பனைக்களத்தில்

காளியின் காட்சியின் தரிசனமே.

கண்ணுக்குக் கலர்வில்லை

கண்மயிருக்கு மஸ்காரா

தலைமுடிக்கு விலைகொடுத்து

கலர் அடித்துக் கலைகாணும்

பொய்முடி தரிக்கும்

மெய் மடிந்த பொய் வாழ்க்கை

கலர் கலராய் கலர் அடித்து- எம்மை

கலர்மனிதர்கள் எனக் கசக்கும்

நிறமிழந்த ஐரோப்பிய

நிஜமற்ற நிதவாழ்க்கை

துவேசம்.


கன்னிகள் எல்லாம்

கனிகளாகி

கண்ணி வைத்து

கண்ணால்

மனதில் கண்ணி வைத்து

கன்னிகழிகிறது

13வயதில் சீதணம் இன்றி.

இதுவும் ஒப்பனையாம்

நாகரீகத்தின் கற்பனையாம்

குழந்தை குழந்தை பெறும்

கோலம்தான் ஒப்பனையோ?


தோடு குத்த இடமின்றி

தொப்பிளிலும் தோப்பையிலும்

கண்காணா இடமெல்லாம்

காட்டவென்றே குத்துகிறார்

குத்திக் குத்தியே

கண்கெட்டுப்போய் பின்

புண்பட்டுப்போனதோ?

அது.

அப்புவின் கோவணம்

ஐரோப்பாவில் நாகரீகம்

பணம் பிதுங்கும் நாடுகளில்

உடையின்றி அவலங்கள்

உடைக்குப் பதில்

உடலில் கீறப்படும்

உடையில்லா வரைபடங்கள்.

வரைபடமே உடையாகும்

ஒப்பனை தனையும்

கண்டீரோ?


ஒப்பனை செய்ய

கீறவிடமின்றி

அங்கேயும் கீறுகிறார்கள்

இனி எங்கெங்கு கீறிக் கிளிப்பார்களோ?

கீறிக் கிளியுங்கள்

பாசமெல்லாம் ஆபாசமாகி

ஊர்வேசம் போடுகிறது

ஐரோப்பா

மெய்மேல் மெய் படுத்து

பொய்போகும் வாழ்க்கையை

மெய் என்றும் காட்டும்

காக்கைகள் தின்னத்துடிக்கும்

யாக்கையின் வாழ்க்கைதான்

வாழ்க்கையா?

இச்சேர்க்கையின் சீற்றம்

இலங்கையிலும் தொற்றுதே

தமிழினத்தில் ஒர் ஐரோப்பா

ஊரில் இனி உருவாகும்.

நோர்வே நக்கீரா 11.06.2010  (தேசம் நெட்டில் வெளியானது)

Puthiya pauttham

இது புதுப் பௌத்தம்


 

buddhamenik
பாதை ஏ9 திறந்தாயிற்று
ஈழத்தமிழர்களின் வாழ்வுபோல்
தலை இல்லாத் தென்னையும் பனையும் தான்
தெருவெங்கும் தோன்றுகின்றன...

துக்கத்திலும்
அவமானத்திலும்
தலைகுனிந்து நிற்கும்
மரங்களுக்கும் எம்மக்களுக்கும்
துப்பாக்கி காட்டியே
ஆறுதல் சொல்கிறார்கள் படைகளும்
அவர்களின் குடைகளும்...!

துப்பாக்கி தூக்கிய கைகள்
வெறுமையாக உயர்த்தப்பட்டபோது
வெளிநாட்டில் எம்தமிழ் மனங்கள்
விதைவையாய் போயின...

மாறிநின்றவர்களுக்குக் கூட
மாண்டவர்கள்
தமிழரின் அடையாளமாய் போயினரே.
திவசத்துக்குக் கூட
அடையாளம் இன்றி
வன்னி வடுவின்றி எலும்புகள் கூட
எரியத் தொடங்கி விட்டன- ஆனால்
தலதா மாளிகையில்
தன்பல்லை வைத்துவிட்டு
பொக்குவாயுடன்; புத்தன்
வன்னிக்கு இறைச்சி தின்னப் போகிறான்.

தினம் மரங்கொண்டு திரிகின்றன
மனிதமற்ற மரத்துப்போன மரங்கள்.

தமிழனின் சிரங்கேட்டான் புத்தன்
கபாலம் கொண்டு
வெளிநாடுகளில் பிச்சையெடுத்துண்ண.
பிச்சாந்தி! பிச்சாந்தி!! பிச்சாந்தி!!!

வன்னிக் கம்பி வேலிகளுக்குப் பின்னால்
காய்ந்த முகங்கள்
இன்றும் கண்ணீர்தான் குடிக்கின்றன.

வன்னி அகதிகள் முகாமிலிருந்து
தோலாடை போர்த்திய எலும்புகள்
வான் நோக்கி
மீட்பரை எதிர்பார்க்கின்றன
கருகிப் போன கர்த்தரிடம்.

ஈழத்து மக்கள் என்மக்கள் என்ற
தென்னிந்தியத் தமிழர்கள் எல்லாம்
வோட்டை வித்துப் பணமாக்கிய பின்
மௌனித்து விட்டனர்
புலிகளின் துப்பாக்கிகள் போல்
பிரபாகனுக்குப் பின்
புல(ன்)ம்பெயர் தமிழர்கள் போல்.

மக்களுக்காய் உணவனுப்பு
மருந்தனுப்பு
என்ற கோசங்கள்
ஐரோப்பாவிலும் அடங்கி விட்டன.
அதே மக்கள்
துப்பாக்கி வேலிகளுக்குப் பின்னால்
இன்றும் பட்டினியுடன்தான்
கம்பி வேலிகளுக்குள் விழிசொருகியபடி.

புத்தனுக்கு மட்டும்
பெருவிழா எடுக்கப்படுகிறது.
தமிழ் யேசுவை சிலுவையில் தூக்கியதால்
ஐயோ என்று ஒப்பாரிவைத்து
அழுகிறார் அல்லா
சிவன் என்றும் போல் சுடலையில் தான்.
பேரிகைகள் முழங்க
பட்டுப்பீதாம்பரம் போர்த்திய
போதிமரப்புத்தன்
பெருவிழாவில் போதிக்கிறான்
கொல்லாமை இல்லையேல்
வெல்லாமை இல்லை...
இது ஈழத்தின் புதிய பௌத்தம்.

-நோர்வே நக்கீரா.

Manithatthai thedy

images

மனிதத்தைத் தேடி...!

மாயை மேகம் மூடிக்கிடக்க
இருளை விரட்டப்
பரிதியில்லை!

அலாரம்
நெஞ்சிலடித்துப் பூபாளம் பாடும்
காலையை எழுப்பிவிடக்
சேவலில்லை!

கோப்பி போட மனைவியில்லை!
கோப்பி மெசினுடன்
சண்டையும் இல்லை!
சீனி குறையக் கூட என்ன
சிணுங்கலில்லை!

மனைவியில்லையாதலால்
பிள்ளையில்லை!
பிள்ளைகளின் தொல்லையில்லை!
மூத்தோர் மனைகளிருப்பதனால்
பிள்ளைகள் தேவையில்லை!

பெண் பொம்மைகள்
சொன்னபடி செய்வதால்
கட்டிலைப் பங்குபோடப்
பெண்ணில்லை!
பெண்மையில்லை!!

பெண்ணின்றிப் போனதாலே
சண்டையில்லை!
சண்டையில்லாக் காரணத்தால்
சரசமில்லை!

இன்டெர்நெட்டில் உணவு வருவதால்
சமையலில்லை!
சமையலறையில்லை!!
சமையலறை இல்லாததால்
செலவில்லை!
உணவு மணமில்லை!!

இன்டெர்நெட்டில் சட் இருக்க
பேசத் தேவையில்லை!
பேசுவதால் வருகிற பிரச்சனை
ஏதுமில்லை!
பேசுவதற்கும் வீட்டில்
மனிதரில்லை!!
மனிதரிலில்லாததால் மனத்தில்
வேதனையில்லை!!

தொலைக்காட்சி, தொலைபேசி என்று
வாழ்வு தொலைந்து கிடப்பதனால்
தேவைக்கு மனிதனைச் சுற்றி
மனிதர் தேவையில்லை!

இல்லை இல்லை இல்லை....!
மனிதனைச் சுற்றி மனிதரில்லை
மனிதனே இல்லா உலகில்
மனிதத்தை எங்கு தேடுவது?

-நோர்வே நக்கீரா.

Paper woman

ஏழுதுதாள் ஏந்திழை
paper woman 2

எங்கோ மூலையில்

ஏனோ தானோ என்று

என்பாட்டில் கிடந்த என்னை

எட்டி எடுத்து

தட்டி

பின் தடவி

மல்லாக்காய் போட்டு

ஏறி நின்று

எழுந்து?.

விழுந்து?.

கிடந்து?.

என்மேல் எழுதினான்

ஒருகவிஞன்
பேனாவின் அழகில்

மயங்கியதாலே

கூரியமுனையால் குத்துப்பட்டேன்.

கீறப்பட்டேன்

பின் கிழிக்கப்பட்டேன்.

என்மேல் கிறுக்கியவனை

விட்டுவிட்டு

என்னைக் கிறுக்கி என்றது

உண்மையற்ற உலகம்.

நீ எழுதி?எழுதி

எழுந்தபோது

கத்திக் கத்தியே

என் காதலைச் சொன்னேன்

வேதனை தாங்காது

அழுது அழுதே சிரித்தேன்

உலகமே உன்கவிதைகளை

வாசித்து வசியப்பட்டு

உன்வசப்படும் போது

பொறாமையில் பொருமுவேன் -நீ

எனக்கு மட்டும் உரியவன் என்று

உன்னைச் சுமப்பதால்

கண்டவன் நிண்டவன்

கைகளில் நான்

விபச்சாரியாக..

விமர்சிக்கப்பட்டேன்

நீ யோசித்ததை

யார் யாரோ வாசித்தனர்

ஆசித்தனர்?.

பூசித்தனர்?..

உன்னால் வாசிக்கப்பட்ட

நான் மட்டும்?.

தூசிக்கப்படுகிறேன்.

கண்டவன் நிண்டவன்

கைகளில்?..

நீ எழுதிப்போன தாள்

நான் என்பதால்

யாரும் என்மேல் இனி

எழுதப்போவதில்லை.

என் அடிமடியில்

நீ மறைத்து எழுதிய

கையெப்பம் மட்டும்

உன் முகவரி தெரியாது

வளர்கிறது என் வயிற்றில்

உன்னை வெளியுலகிற்கு

வெளிச்சம் போட்டுக் காட்டியவள்

இருளிலல்லவா கிடக்கிறேன்.

கண்ணா!!

விழி மொழியாயோ?

வாழ்வில் ஒளி தருவாயோ?

என்கருவறை சுமக்கும்

உன் கவிதைக் குழந்தைகளுக்கு

காசுக்களால் காணிக்கை

பணத்தினால் பட்டாபிசேகம்

என்கருவறைக்கு மட்டும்

கண்ணீர்தானா காணிக்கை???

இதுதான் உலகின் வாடிக்கை

பெண்ணாய் போனதால்

எல்லாமே கேளிக்கை?வேடிக்கை!!!

kai Ilantha tamiler



 

கையிழந்த தமிழர்கள்
handdog 2

வெடியோசை கேட்டு
படிதாண்டாப் பத்தினிகள்
பக்க மதில் தாண்டி ஓடுகையில்....!!

வெடிச்சத்தம்கேட்டு
வெருண்டோடும்
ஈழத்தமிழ் நாய்களோ...!
சத்தம் வந்த திசை நோக்கியோடும்
வீரம் பிறந்த மண்ணில்
நாயென்ன விதிவிலக்கா...!


நாலுநாள் சாப்பிடாத நாய்க்கு
சிதறிச் சின்னாபின்னமாகிக் கிடக்கும்
தமிழ் உடல்கள் விருந்துதான்.

வீரர் உடல்களை
மாவீரர் உடல்களை
தின்றநாய்களுக்கு வீரம்வராமல்....!!!


குண்டு சிதறி
விழுந்த கைகளை
நாய்கள் எழுத்துக் கொண்டு ஓட
அவற்றைக் கலைத்துக் கொண்டு ஓடும்
கையற்ற மனிதர்கள்.
கைகொடுத்த இனமல்லவா
தமிழினம்...!!!
கைகொடுத்து
கையிழந்து நிற்கிறது.


அன்று கையிழந்த தமிழர்
இன்று தலையிழந்து போயினர்.

குண்டு விழுந்த கைபோச்சு
விழுந்த கையுடன் நாய்போச்சு
குண்டு தலையில் விழுந்திருந்தால்
கையின் கவலை இருக்காதே

போர்நாயின் வாயில்
எம் இயற்-கையும்.
மனிதத்துவக்காலும்.
இனி முண்டம் இருந்தென்ன

(கவிதைத் தொகுப்பு கவிமலர்கள். 1987ல் எழுதிய கவிதை)

Anpu

அன்பான மனைவி/ தாய்       கவிமலர்கள் தொகுப்பிலிருந்து 

family

அன்பெனும் ஆலயத்தில்
அடைந்திருக்கும் வெண்புறாவே!
என்புறாவே!
வாசல் திறந்து விட்டு
வசைபாடிய நின்றாலும்
சிறகடிக்காதது ஏனடியே?

காதல் சிட்டுக்கள் என்றும்
சிறகடிக்கும் என்பாரே
என்சின்னக்காதலினால்
சிறகிழந்து போனாயோ?

மழைமேகம் கண்டு
மகிழாத மயிலுண்டோ!
மனமேகம் தேடி
மகிழ்ந்தாட வந்தாயோ?

சிங்காரமாய் சிறகடிக்கும்
சிட்டுலகில் பிறந்து வந்தும்
சின்னக்காதலினால்
சிறகிழந்து போனாயோ?

காதலென்பது காயப்படுத்தும்
என்பதை யார் அறிவார்.

காயத்தில் காயம்படாது
காயப்படுத்தும் காதலை
காயமாய் எண்ணி
கண்மூடி ஏற்றால்
அவள் காமாட்சி

பெண்ணெனும் பூவொன்று
பூவுலகில் இல்லாவிடில்
ஆணென்ற மிருகம்
அசிங்கமாய் வாழ்ந்திருக்கும்.
மலரம்புகளை மறுதலித்து
மனமொன்றை ஏற்கும் இந்த
மானிடப் பெண்மைதான்
தாயோ?

Naddpu

நட்பு
friendship


நா(ந)விலே தொடங்கி
தப்புத்தப்பாய் நாவில் தட்டுப்பட்டு.
பு பு (பூ) என்று ஊதியதும்
நாவால் பூப்போல் வாடும்
பூவே நட்பு
இதுவே எழுத்தின் நடப்பும்

Vennpani


black and white 1

  வெண்பனி

விண்ணில் நின்று
வெண்பனியொன்று
மண்ணில் விழுந்தது எதனாலே?

கருமேனியொன்றில்
காதல் கொண்ட
கண்கெட்டுப்போனது அதனாலே!

காதல் கொண்டு
கட்டியணைத்து
கரைந்து போன காரணத்தால்
கருப்பனோ அவளை
தட்டிவிழுந்தான் தரையின்மேலே
ஏறி உளக்கினான் காலின் கீழே.

சேறாய் சகதியாய்
நாறிக்கிடந்து
தானாய் பெறுவாள்
பெருமகவென்றை

கறுப்பனின் மேல் காதல்
அவள் கண்ணீரில் முடியும்.
கருப்பைக் காதல்
அவன் பாஸ்போட்டாய் விடியும்.

Just only Tamil (Thamill)

தமிழ் 


tamil murugutamil 2

தமிழ்தானே

கானக்கவியே நீ குயில் தானோ?
            கானமிசைப்பதுவும் கன்னித் தமிழ்தானே?
வான் நின்று முழங்கும் இடியே- நீ
            வளர்த்த தாளமும் வளர்தமிழ்தானோ?

பிரணவப்பொருளாம் பரம்பொருளே!
             பிரளயத்தில் பிறப்பதும் தமிழ்தானோ
ஆணவம் அழிக்கும் அருட்பொருளாய்
            அன்பாய் அணைப்பதும் தமிழ்தானோ?

ஆதிசக்தியாம் உமையவளே!
             உன்னில் நின்றதும் என் மொழிதானே
பாதிக்கடலில் அலைவரினும் -அது
           பாடும் பொருளும் தமிழ்தானே

ஆடும் தென்றலில் அழகு கண்டு
          ஆனந்தத் தமிழை அதில் வரைந்து
ஓடும் நதியின் சலசலப்பில்
           ஓங்காரப் பொருளாய் நிதம் கேட்டேன்.


காமன் கரும்பில் சுவை ஏது? ?என்
           கன்னித் தமிழை இரசிக்கும் போது
வாமனன் வடிவில் வந்த கண்ணா!- நீ
          வளர்ந்த நின்றாயோ என் தமிழ்பார்த்து.

உலகின் ஓட்டில் உலாவரினும்
          எங்கும் கேட்பது என்மொழிதானே
இலகுநடையில் தமிழ் எழுத்தி
           இறவாதிருக்கம் என்கவிதானே


நோர்வே நக்கீராவின் கவிமலர்கள் தொகுப்பில் இருந்து ஒரு காணிக்கை

Les mer i arkivet » Desember 2011 » Juni 2010 » Desember 2009
hits